சென்ற 24.07.2016 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகத் தெரிவு நடைபெற்றது. அத்தெரிவில் ஏலவே இருந்த அதே நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இச்செய்தி கேட்ட பெரும்பான்மையான ஆலிம்களும்;, பொது மக்களும் தமது மகிழ்சியையும், ஆதரவையும் தெரிவித்திருந்த அதே வேளை சர்வதேச மட்டத்தில் பல அறிஞர்கள் பலரினாலும் பல பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
ஆனாலும் எமது நாட்டில் விரல் விட்டு எண்ணப்படக்கூடிய ஒரு சில சகோதரர்கள் சமூக ஊடகங்களில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியது மட்டுமல்ல சிலர் தமது காழ்ப்புணச்சியையும் வெளிப்படுத்தியமை மிக மன வேதனையைத் தந்ததது. சிலர் தனிப்பட்ட முறையில் ஒரு சிலரின் மீதி இருக்கக் கூடிய கோபம், பொறாமை, அதிருப்தியின் காரணமாக முழு ஜம்இய்யாவையும், ஒட்டுமொத்த ஆலிம்களையும் குறை கூறியிருந்ததானது அவர்களின் மறுமை வாழ்வைக் கூட நாசப்படுத்தி விடுமோ என்று அஞ்சக் கூடிய முறையில் அவர்களின் பின்னூட்டல்களும், பதிவுகளும் அமைந்திருந்தன். மிகவும் சொற்பமானவர்களின் இந்தக் கருத்துக்களுக்கு பதில் சொல்லத் தேவையில்லை என்ற போதிலும் அந்த சொற்பமானவர்களும் எமது சகோதரர்களல்லவா! அவர்களும் இது பற்றித் தெளிவு பெற வேண்டும் என்ற நேக்கில் இக்கட்டுரை எழுதப்படுகிறது.